தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி காலை 10.30 மணி நிலவரப்படி 25,428 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் மணி, அதிமுக சார்பில் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 81.20 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் தருமபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூர் (தனி), மேட்டூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணி அளவில் வெளியான தகவல் படி, பாமக வேட்பாளர் சவுமியா அன்பு மணி - 25,428 வாக்குகள், திமுக வேட்பாளர் மணி - 12,064 வாக்குகள், அதிமுக வேட்பாளர் அசோகன்- 10,064 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா - 2,453 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி நேரடியாக தேர்தல் களம் கண்டுள்ளதால் தமிழக அளவில் உற்று நோக்கும் தொகுதியாக தருமபுரி மக்களவைத் தொகுதி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சவுமியா அன்புமணி முன்னிலை வகிப்பதால் பாமக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.