மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அக்கட்சி நிறுவனரான மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத் குமாரும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எம்பி- மாணிக்கம் தாகூரும் போட்டியில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை சுமார் 10 மணி நிலவரப்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 23,837 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 21,731 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதற்கு அடுத்த இடத்திலேயே பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் உள்ளார்.
விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்பி-யான மாணிக்கம் தாகூர், நடிகை ராதிகா சரத்குமார் ஆகிய முக்கிய பிரபலங்கள் போட்டியில் உள்ள தொகுதி என்பதால் விருதுநகர் மக்களவைத் தொகுதி வெற்றி நிலவரம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.