மான் முட்டியதில் வனத்துறை ஊழியர் உயிரிழப்பு... சேலம் உயிரியல் பூங்காவில் அதிர்ச்சி!


மான்கள் முட்டியதில் உயிரிந்த வனத்துறை ஊழியர் தமிழ்செல்வன்

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வனவிலங்குகளுக்கு உணவு வைக்கச் சென்ற வனப்பாதுகாவலர் மான் முட்டியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பூங்காவில் காட்டுமாடு, மான், குரங்கு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களை பராமரித்து வருகின்றனர். இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா வந்து செல்கின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு தலங்களில் ஒன்றாக இது விளங்கி வருகிறது.

குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா

இந்த நிலையில் இன்று மானுக்கு உணவு வைக்க வனவிலங்கு பாதுகாவலர் முருகேசன் மற்றும் வனத்துறை ஊழியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மான் முட்டியதில் உணவு வைக்க சென்ற வன விலங்கு பாதுகாவலர் முருகேசன், மற்றும் தமிழ்செல்வன் படுகாயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்த வன ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம் அரசு மருத்துவமனை

இதில் தமிழ்செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முருகேசனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உணவு வைக்க சென்ற வன ஊழியர்கள் மான் முட்டியதில் பலியான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினரும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x