தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசிய வழக்கில் விழுப்புரம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று விசாரணைக்கு ஆஜராகினார்.
தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தது.
இதில் இரண்டு வழக்குகளில் விழுப்புரம் மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திலும், பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதால் இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் ஆஜரான அவரிடம் நீதிபதி சில கேள்விகளை எழுப்பியதாகவும், அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணைக்குப் பிறகு இந்த வழக்குகள் மீண்டும் மற்றொரு நாளுக்குப் பட்டியலிடப்படும் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சி.வி. சண்முகத்துடன் அவரது ஆதரவாளர்களும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இதன் காரணமாக விழுப்புரம் நீதிமன்றம் சிறிது பரபரப்பாக காணப்பட்டது.