ஓடி ஒளியவேண்டாம்; திரும்பிவந்து சரணடையவும்... பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கெஞ்சும் குமாரசாமி!


குமாரசாமி பிரஜ்வல்

பாலியல் வன்கொடுமை மற்றும் ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ள தேவகவுடாவின் பேரனும், மஜத எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய குமாரசாமி, “பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் இருந்தாலும் திரும்பி வருமாறு ஊடகங்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன். பயப்பட வேண்டாம். இந்த நாட்டின் சட்டம் நடைமுறையில் உள்ளது. எவ்வளவு காலம் ஓடி ஒளிய முடியும். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு என் மீதும், அவரின் தாத்தா மீதும் மரியாதை இருந்தால், அவர் மீண்டும் இந்தியா வந்து போலீசில் சரணடைய வேண்டும்.

உங்களிடம் கைகூப்பி ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். 24 முதல் 48 மணி நேரத்திற்குள் நீங்கள் சரணடைய வேண்டும். லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். நீங்கள் எவ்வளவு காலம் வெளிநாட்டில் இருக்க விரும்புகிறீர்கள்? தயவுசெய்து இந்தியாவுக்கு திரும்பி வந்து அதிகாரிகள் முன் ஆஜராகவும்” என்றார்

குமாரசாமி பிரஜ்வல் ரேவண்ணா

தொடர்ந்து பேசிய அவர், “இதை எனது தந்தை (எச்.டி. தேவகவுடா) மூலம் தெரிவிக்க விரும்பினேன். பிரஜ்வல் ரேவண்ணா அரசியலில் வளர அவர் தனது ஆதரவை வழங்கினார். பிரஜ்வல் ரேவண்ணா தனது தாத்தா மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு மரியாதை அளிக்க விரும்பினால், அவர் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும்.

இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு அருவருக்கத்தக்க வழக்கு. நம் அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது" என்று கூறினார்.

பிரஜ்வல் ரேவண்ணா, குமாரசாமி, மோடி, தேவகவுடா

மேலும், “எனது குடும்பத்தை குறிவைக்க காங்கிரஸ் நூற்றுக்கணக்கான முயற்சிகளை மேற்கொள்ளட்டும். எனது கட்சியினர் போராடும் வலிமையை எனக்கு அளித்துள்ளனர். இந்த விவகாரம் எனக்கு முன்னரே தெரிந்திருந்தால் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேற விட்டிருக்க மாட்டேன். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எங்கள் மீது மரியாதை இருந்தால் திரும்பி வந்து எஸ்ஐடிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று எனது தந்தையிடம் பகிரங்க அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டேன். மக்கள் எங்கள் குடும்பத்தை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்" என்று குமாரசாமி கூறினார்.

x