உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 79 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், 4 கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளது. 5வது கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற மே 20-ம் தேதி 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ” 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்திய மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டனர். ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணியை ஆட்சி அமைக்கும்.
இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான மிக முக்கிய தேர்தல் இது. ஒரு பக்கம் ஏழைகளை ஆதரிப்பவர்கள் இருக்கிறோம். மற்றொரு பக்கம் பணக்காரர்களை ஆதரித்து மதத்தின் பெயரால் தேர்தலை எதிர்கொள்பவர்கள் இருக்கிறார்கள். பட்டங்கள் இருந்தும் இங்கு பலருக்கு வேலை கிடைப்பதில்லை.
எங்களுடைய போராட்டம் வேலையின்மை மற்றும் விலை உயர்வுக்கு எதிரானது. நாட்டில் முதல் முறையாக 26 கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இது பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. தலித்துகள், ஆதிவாசிகள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடை காப்பாற்றுவதற்காக நாங்கள் இணைந்துள்ளோம்.” என்றார்.
பின்னர் பேசிய அகிலேஷ் யாதவ், ”எதிர்மறையான பிரச்சாரங்களால் பாஜக துவண்டுள்ளது. அவர்களின் வாக்குறுதிகள் பொய் என்பது தெரியவந்துவிட்டது. 140 கோடி மக்களும் சேர்ந்து இனி பாஜகவை வெறும் 140 இடங்கள் கிடைக்க போராட வைப்பார்கள். அவர்களின் ரதம் பாதியில் மாட்டிக் கொண்டு விட்டது. நாடு மாற்றத்தை எதிர் நோக்குகிறது. நிச்சயம் இந்தியா கூட்டணி அரசு உருவாகும்.
லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பண்டல்கந்த் பகுதி மக்கள் பாஜகவை கிழித்தெறிவார்கள். உத்தரப்பிரதேசத்தில் 79 இடங்களில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெறும். மக்கள் வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு வினாத்தாள்கள் கசிந்துள்ள விவகாரம் அதனை மேலும் மோசமடைய செய்துள்ளது.” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!