முன்வரிசை திமுக அமைச்சர்கள் அதிமுகவில் தாய்ப்பால் குடித்தவர்கள்... ஆர்.பி.உதயகுமார் பதிலடி!


ஆர்.பி.உதயகுமார்

"திமுக அமைச்சரவையில் முதல் வரிசையில் உட்கார்ந்து இருப்பவர்கள் அதிமுகவில் தாய்ப்பால் குடித்தவர்கள். அதிமுக அமைச்சரவையில் இருந்தவர்களை அபகரித்து சென்று திமுக, அமைச்சராக்கியுள்ளது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா, மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள மேலக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடக்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் சொன்னவர் இன்று லண்டனில் சுற்றுலா முகாம் அமைத்துள்ளார். இளைஞர் நலன் மேம்பாட்டிற்காக பாடுபடுவார் என்று பார்த்தால் அவரது மகனோடு அவர் விளையாடும் காட்சிகளைத் தான் பார்க்க முடிகிறது.

ஆர்.பி.உதயகுமார்

இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் ஒரு விளையாட்டு பிள்ளையாக இருப்பதை தான் நாம் பார்க்க முடிகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்கணக்கீட்டு முறையை மாதம் ஒருமுறை செய்வோம் என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இன்று பழுதடைந்துள்ள மின் மாற்றிகளை கூட சீர் செய்யாமல் அவர்கள் விட்டு விட்டார்கள்.

தமிழக அமைச்சர் ரகுபதி அதிமுகவில் பிளவு வரும் என்று சொல்கிறார். உங்களைப் போன்றவர்களை அழைத்து வந்து அமைச்சரவையில் முதலிடத்தில் திமுக உட்கார வைத்துள்ளது. கிளைக் கழக, ஒன்றிய கழகச் செயலாளர்களாக அதிமுகவில் இருந்தவர்களை அம்மா அமைச்சராக்கி அழகு பார்த்தவர்களை தான் இன்று திமுகவினர் அமைச்சராக்குகிறார்கள்.

அன்னதான நிகழ்ச்சியை தொடக்கி வைத்த ஆர்.பி.உதயகுமார்

திமுக கிளைக் கழகச் செயலாளர்களாக இருந்தவர்களுக்கு அக்கட்சியில் அமைச்சர் பதவி கொடுத்ததில்லை. அதிமுக அடையாளம் காட்டியவர்களை அழைத்துச் சென்று அமைச்சரவையில் இடம் கொடுப்பதற்கு எதற்கு கட்சி நடத்த வேண்டும்? இன்று திமுக அமைச்சரவையில் முதல் வரிசையில் உட்கார்ந்து இருப்பவர்கள் அதிமுகவில் தாய்ப்பால் குடித்தவர்கள். அதிமுக அமைச்சரவையில் இருந்தவர்களை அபகரித்து சென்று அமைச்சராக்கி இருக்கிறீர்கள். அதிமுகவால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் செல்வாக்கை அறுவடை செய்வதற்காகத்தான் இந்த பதவி வழங்குகிற சூழ்ச்சி நடைபெறுகிறது" என்றார்.

x