விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? - ராமதாஸ் சொன்ன பதில்!


பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் தொடர்ந்து சமூக நீதி குறித்து விடாமல் பேசி வருவது பாமக தான். சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக திருத்தி அமைக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பாமக வலியுறுத்தி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டுமென தமிழக அரசு கூறுகிறது” என்றார்.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்

மேலும் ”தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் இடஒதுக்கீடு தமிழக அரசு வழங்கவில்லை. அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

தமிழக அரசு

தொடர்ந்து பேசிய அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும். மேகதாதுவில் அணை கட்டுவோம் என அம்மாநில அரசு கூறுவது கண்டிக்கதக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் முதல்வர் அமைதி காத்து வருகிறார்.

கர்நாடகா தண்ணீர் தராத நிலையில் குறுவை சாகுபடி செய்ய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் மாற்று சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும். அரிமாசங்கம், வனத்துறை இணைந்து மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்றவேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்ஸாமியர்களுக்கு எதிராக மோடி பேசுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், ”ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள். அப்படி தான் மோடி பேசுகிறார்” என்றார்.

x