மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி குறைந்தபட்சம் 315 இடங்களையும், பாஜக அதிகபட்சமாக 195 இடங்களையும் கைப்பற்றும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கணித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கான் மக்களவைத் தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது, "இதுவரை நல்ல வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதனால்தான் மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள் பதற்றத்தில் உள்ளனர். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரப்போவதில்லை என்பதை அவர்களே உணர்ந்துள்ளனர்.
பாஜகவினர் இனி 400 தொகுதிகளில் வெல்வோம் என பெருமிதம் கொள்ளக்கூடாது. அவர்கள் 195 இடங்களை மட்டுமே வெல்வார்கள். இந்தியா கூட்டணி 315 இடங்களை வெல்லும்.
மாதுவா சமுதாயத்தினர் மீது பிரதமருக்கு அவ்வளவு அன்பு இருந்தால் சிஏஏ படிவத்தை நிரப்பாமல் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். சிஏஏ அமலாக்கத்தை எப்படியும் நிறுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அவர்கள் (பாஜக) அதை செய்ய விரும்பினால், அது நான் உயிரோடு இருக்கும் வரை நடக்காது.
சந்தேஷ்காலியில் அமைதியின்மையை ஏற்படுத்தி மேற்கு வங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்துள்ளது. மேலும் சந்தேஷ்காலி பெண்களை பாஜக அவமதிக்கிறது. பராக்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அறிவித்த 5 உத்தரவாதங்கள் ஆதாரமற்றவை. ஏனெனில் அவை ஒருபோதும் நிறைவேற்றப்படாது.” இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!