எடப்பாடி பழனிசாமியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் உள்ள அவரது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
சிற்றுண்டி வழங்குதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, நோட்டு புத்தகம் வழங்குதல், முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களை பாராட்டி கவுரவித்தல், குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்குதல், ஏழை, எளியோருக்கு பிரியாணி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முதலே தொண்டர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இன்று சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்கள் மத்தியில் 70 கிலோ எடைகொண்ட கேக் வெட்டி தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினார். எடப்பாடி பழனிசாமியின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு ஏழு பேருக்கு கன்றுகளுடன் கூடிய கறவை மாடுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.