மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் 29 மக்களவைத் தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல்களில் 21 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், உஜ்ஜைன், இந்தூர் ஆகிய தொகுதிகளுக்கு 4-வது கட்டமாக மே 13 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தூர் தொகுதியில் தற்போதைய பாஜக எம்.பி. சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், காங்கிரஸ் தரப்பில் களம் காலியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றுவிட்டது தான் அதற்குக் காரணம். அக்கட்சியின் சார்பில் அக்சய் காந்தி பாம் என்பவர் களமிறக்கப்பட்டார். காங்கிரஸுக்கு அதிா்ச்சியூட்டும் வகையில் கடைசி நாளில் அவர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.
இதனால், 9 சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பலம்வாய்ந்த வேட்பாளர் யாரும் இல்லாததால் அங்கு பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது அங்கு பிரச்சாரம் செய்து வருகிறது. தங்களுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் நோட்டாவுக்கு வாக்காளிக்குமாறு காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த மக்களவைத் தோ்தலில் இந்தூர் தொகுதியில் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் நோட்டாவுக்கு 5045 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இத்தேர்தலில் நோட்டா புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.