2 மனைவிகள் உள்ள ஆண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி கிடைக்கும் என மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் காந்திலால் பூரியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், ரத்லம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காந்திலால் பூரியா போட்டியிடுகிறார். இந்நிலையில் அத்தொகுதிக்கு உட்பட்ட சைலானாவில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இதில், அம்மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய சிங், மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது வேட்பாளர் காந்திலால் பூரியா பேசுகையில், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வரவு வைக்கப்படும் என எங்கள் (காங்கிரஸ்) தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரண்டு மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்றார்.
இதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்தவர்களிடையே சிரிப்பலை ஏற்பட்டது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பிரிவில் இருந்து வெளியேறும் வரை பெண்களுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தான் இரண்டு மனைவிகள் உள்ள ஆண்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும் என காந்திலால் பூரியா வேடிக்கையாக கூறினார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசில் காந்திலால் பூரியா, பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக இருந்தவர்.
இந்நிலையில் 73 வயதான காந்திலால் பூரியா, பெண்களை அவமதித்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அவரது இரண்டு மனைவிகள் பேச்சு தொடர்பான வீடியோவை மத்தியப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, எக்ஸ் தளத்தில் பதிவேற்றி, தேர்தல் ஆணையத்துக்கு டேக் செய்து, பூரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!