டெல்லியில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது, சிறையில் உள்ள அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக கோஷமிட்ட இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று இரவு டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மைதானத்துக்குள் அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி தலைவரும், மாநில முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
அந்த இளைஞர்கள், ஆம் ஆத்மியின் பிரச்சார கோஷமான 'ஜெயிலுக்கு பதிலடியாக வாக்களிப்போம்' என்ற வாசகங்கள் பொறித்த டி-ஷர்ட்டுகளை அணிந்திருந்தனர்.
இந்நிலையில் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக கோஷமிட்ட இளைஞர்களை டெல்லி போலீஸார் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக டெல்லி போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “போலீஸார் ஸ்டேடியத்தின் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
போட்டியின் போது ஒரு ஸ்டாண்டில் அரசியல் கோஷங்களை எழுப்பி இடையூறு ஏற்படுத்திய சிலரை நாங்கள் பிடித்து வைத்துள்ளோம். சட்ட நடவடிக்கைக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்றார்.
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சி, வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஐபிஎல் போட்டியின் போது முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக கோஷமிட்ட கட்சியின் மாணவர் பிரிவான 'சத்ரா யுவ சங்கர்ஷ் சமிதி' (சிஒய்எஸ்எஸ்) தொண்டர்களை காவல் துறை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டி மைதானத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக இளைஞர்கள் கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.