நெல்லை ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் இறந்த வழக்கில் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலுவுக்கு காவல்துறை முன்பு இன்று ஆஜராவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4-ம் தேதி அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கு முன்பாக இவரது மகன் தனது தந்தையைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதற்கு முன்பாக, தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர் . அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று 4 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை ஜெயக்குமார் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
அத்துடன் ஜெயக்குமார் மரணம் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தில் குரல்வளை முற்றிலுமாக எரிந்துள்ளது. ஏற்கெனவே இறந்த உடலை எரித்தால் மட்டுமே குரல்வளை முற்றிலுமாக எரியும் என்று உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தனசிங் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் காவல் துறையினர் முடிவெடுத்துள்ளனர். அத்துடன் உடற்கூறாய்வு அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு இன்று ஆஜராகிறார்.
ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்ளிட்ட 30 பேருக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் 15-க்கும் மேற்பட்டோரிடம் காவல் துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன்படி தங்கபாலுவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியது. அதனால், நெல்லை மாவட்ட காவல் துறை முன்பு தங்கபாலு இன்று ஆஜராகிறார். இதனால் இவ்வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.