பஞ்சாபில் விவசாயிகள் 5வது நாளாக நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டம் காரணமாக, ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 20 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் திரும்ப வழங்கி உள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஹரியாணா போலீஸார் பஞ்சாபைச் சேர்ந்த 3 விவசாயிகளை கைது செய்திருந்தனர்.
கடந்த ஏப்ரல் 16ம் தேதி மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர்கள் மூவரும் விடுதலையாகவில்லை. இதையடுத்து ஃபெரோஸ்பூர் கோட்டத்திற்குட்பட்ட அம்பாலா-லூதியானா ரயில் நிலையங்களுக்கிடையே விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களாக தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் காரணமாக தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 62 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது.
கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 388 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 133 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், 226 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதாகவும் ஃபெரோஸ்பூர் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தும் ரயில்கள் வராததால் பயணிகள் தங்களது முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களை ரத்து செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1.49 லட்சம் ரூபாய் பணத்தை ரயில் பயணச்சீட்டுகளை ரத்து செய்ததன் மூலம், பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வழங்கி உள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும், 20 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை, 3,821 பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வழங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.