போதைப்பொருள் வழக்கில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ சுக்பால்சிங் கைரா. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை சுக்பால்சிங் எம்.எல்.ஏ. வீட்டில் ஜலாலாபாத் காவல்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் சுக்பால் சிங் எம்.எல்.ஏ.வை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுக்பால்சிங், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சோதனை செய்தபோது, அதை ஃபேஸ்புக் பக்கத்தில் சுக்பால்சிங் குடும்ப உறுப்பினர் ஒருவர் நேரடியாக ஒளிபரப்பினார். சுக்பால்சிங் எம்.எல்.ஏ. கைதுக்கு காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.