இன்று முஸ்லிம் சகோதரர்கள் மிலாது நபி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடைப்பெற இருந்த மிலாது நபி ஊர்வலத்தை இஸ்லாமிய அமைப்புகள், ரத்து செய்து அக்டோபர் 1ம் தேதி மிலாது நபி ஊர்வலம் நடைப்பெறும் என்று தேதிமாற்றம் செய்து அறிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மிலாது நபி ஊர்வலத்தில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இந்த ஊர்வலம் தர்கா குவாத்ரிசமனில் தொடங்கி மொகல்புராவில் நிறைவடையும். நகரத்தைச் சுற்றி ஆங்காங்கே நடத்தப்படும் சிறிய ஊர்வலங்கள், பெரிய ஊர்வலத்துடன் இணையும்.
இந்நிலையில், இன்று செப்.28-ம் தேதி ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு ஊர்வலங்கள் நடைபெறுவதை அறிந்த தெலங்கானா போலீஸார் பதற்றமடைந்தனர். கலவரம் ஏற்படலாம் என்று செய்வதறியாது பரபரத்தனர்.
இந்நிலையில், இன்று நடைப்பெறவுள்ள விநாயகர் ஊர்வலத்திற்காக, மிலாது நபி ஊர்வலத்தை ரத்து செய்து வேறொரு தேதிக்கு மாற்றிக் கொள்வதாக இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சன்னி யுனைடெட் ஃபோரம் ஆஃப் இந்தியா (எஸ்யூஎஃப்ஐ) அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்கு முன்னோடியாக விளங்கும் வகையில் நடைபெறும் வருடாந்திர மிலாது உன் நபி ஊர்வலத்தை ரத்து செய்கிறோம்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகரத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார். மிலாது நபி ஊர்வலம் வரும் அக்டோபர் 1ம் தேதி நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த முடிவுக்கு முஸ்லிம் அமைப்புகளைப் பாராட்டி வருகின்றனர்.