முதுகெலும்பில்லாத எதிர்த்து பேச முடியாத கட்சி தான் அதிமுக... கே.எஸ்.அழகிரி தாக்கு!


கே.எஸ்.அழகிரி

பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து அதிமுகவால் அரசியல் செய்ய முடியாது. முதுகெலும்பில்லாத எதிர்த்து பேச முடியாத கட்சி அதிமுக என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி கூறினார்.

கே.எஸ்.அழகிரி

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ நாடாளுமன்றத்தை தனது ஆளுமையின் கீழ் கொண்டுவர நினைக்கிறார் மோடி. தொகுதி வரையறைக்கு உட்பட்டு இட ஒதுக்கீடு கொண்டுவர தந்திரம் செய்கின்றனர். தென் மாநிலங்கள் நான்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேவையில்லை என நினைக்கின்றனர்.

வட மாநிலங்களான மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே பாரதிய ஜனதா கட்சிக்கு போதும் என்று நினைக்கிறார்கள். 120 தொகுதிகளை வடமாநிலங்களில் அதிகப்படுத்தி அதன் மூலம் பலனடைய நினைக்கிறார்கள். இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு தென் மாநிலங்கள் தேவையில்லை என நினைக்கிறார்கள்.

மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இதில் பலன் அடையப்போவது உயர்ந்த சாதியினர் மட்டுமே. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் ஓபிசி மற்றும் பட்டியலினத்தவர் இடம் பெறும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். அதில் எஸ்.சி, எஃப். சி எவ்வளவு இருக்கின்றனர் என்ற கணக்கு இல்லை. அது இல்லாமல் எப்படி இடஒதுக்கீடு கொடுக்க முடியும்? இதை வன்மையாக கண்டிக்கிறோம்,

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த பொழுது 50 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கொடுத்து சாதனை படைத்தது. தென் மாநிலங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை காங்கிரஸ் கண்டிக்கிறது. காவிரி ஆணையம் உத்தரவினை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறோம். தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க காங்கிரஸ் கட்சி கண்டிப்பான முறையில் போராட்டம் நடத்தும்.

பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து அதிமுகவால் அரசியல் செய்ய முடியாது. முதுகெலும்பில்லாத எதிர்த்து பேச முடியாத கட்சி அதிமுக’’ என்றார்.

x