பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி 19 ஆண்டுகள் முடிந்து, 20 ம் ஆண்டு தொடங்கியுள்ளதை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் வரை அகலரயில் பாதையில் இயங்கி வரும் பொதிகை அதிவிரைவு ரயிலானது தனது சேவையை 20.09.2004 அன்று தொடங்கியது. முதலில் சென்னை-விருதுநகர் வரை இயக்கப்பட்டு அதன் பின்னர் ராஜபாளையம்-தென்காசி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்ட பொதிகை ரயில் 2008 ம் ஆண்டு செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த அதிவிரைவு ரயில் சேவை தொடங்கி நேற்றுடன் 19 வருடம் முடிந்து 20-வது ஆண்டு தொடங்கும் நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
ரயில் பயணிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தின் சார்பில் ரயில் நிலைய வளாகத்தில் பொதிகை ரயிலை இயக்கும் ரயில் ஓட்டுனர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு அவர்களை கொண்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலைப் போன்று வடிவமைக்கபட்ட கேக் வெட்டப்பட்டது.
அங்கு வந்திருந்த அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. இதில் அதிமுக, திமுக பிரமுகர்கள், ரயில் பயணிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.