கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸும், திமுகவும் பொய் பிரச்சாரம் செய்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: “கச்சத்தீவு பிரச்சினை எப்போதோ 1974ம் ஆண்டில் நடந்தது. இப்போது ஏன் அதைப்பற்றி பேசுகிறீர்கள் என கேட்கலாம். ஆனால் 50 வருடமாக உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தெரியாமல் கொடுத்துவிட்டார்கள். யாரோ கொடுத்துவிட்டார்கள் என்பது போன்ற பொறுப்பில்லாத பேச்சுகள் நிறைய வருகின்றன.
கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் சர்ச்சுக்கு இன்றும் தமிழக மீனவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். அது நமது பொருளாதார மண்டலத்தில் வருகிறது. இப்படி இருக்கும்போது கச்சத்தீவு விவகாரத்தைப் பற்றி தற்போது பேசாதீர்கள் என கூறும் 2 பேரும் (காங்கிரஸ், திமுக) அப்போதும் கூட்டணி, இப்போதும் கூட்டணி. கச்சத்தீவு விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
காங்கிரஸ், 1967க்குப் பிறகு தமிழ்நாட்டில் இன்னும் திரும்பி ஆட்சிக்கு வர முடியாத நிலைமை. மாநில கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டுதான் பிழைப்பு நடத்துகிறீர்கள். காங்கிரஸின் வாக்கு வங்கியும் 4 சதவீதமாக சரிந்துவிட்டது. கச்சத்தீவை ஏன் இலங்கைக்கு கொடுத்தீர்கள் என்பதற்கு தேசிய கட்சியான காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும். அக்சாய்சின் (ஜம்மு - காஷ்மீர்) ஏரியாவை நாம் இழந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். கச்சத்தீவு ஒரு தொல்லை என நேரு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதே மாதிரி இந்திரா அம்மா அது (கச்சத்தீவு) ஒரு சின்ன பாறைதான். அதை நாம் கொடுத்துவிட்டால் ஒன்றும் நஷ்டம் இல்லை என்று சொன்னார்.
அப்போதிருந்த முதல்வர் கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாரா?. தேர்தல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு இது பற்றிய உண்மை தெரிய வேண்டும். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் விரோத செயல்களை காங்கிரஸ் செய்தபோது, தோழமை கட்சி திமுக ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் 2014இல் இருந்து கச்சத்தீவு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் 21 கடிதங்களை எழுதியுள்ளார்” இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.