ஓட்டுக்குப் பணம்... ஐந்து இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை!


வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் 5 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19 தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காக வருமானவரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தனியாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு சென்னையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்த தகவலின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னையில் 5 இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 20 -க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் வசித்து வரும் ஹிந்தாராம் சவுத்ரி என்பவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இவர் எலெட்ரிக்கல் பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சென்னை கொண்டித்தோப்பு சக்கரை செட்டி தெரு, ரைஸ்மில் தெரு ஆகிய பகுதியில் உள்ள இவரது வீடு அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், சென்னை ஓட்டேரி நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x