முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தோல்வி பயத்தில் உள்ளனர். இந்த தேர்தலோடு திமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து சோளிங்கர் பாண்டியநல்லூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தோல்வி பயத்தில் உள்ளனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் இனி மக்களை ஏமாற்ற முடியாது. இந்த தேர்தலோடு திமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். அவர்களின் வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனை என்ன? நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற வேறு என்ன செய்தீர்கள். திமுகவின் உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக. அஞ்சாது. அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவது வாடிக்கையாகிவிட்டது. எங்கள் ஆட்சியின்போது திமுக மீது வழக்கு போடவில்லை, மக்கள் பணியாற்றினோம். திமுக அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால்தானே நாங்கள் குறை கூற முடியும்.
மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பளு தூக்குவதையும், சைக்கிள் ஓட்டுவதையும் பார்க்க தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான். சட்டமன்ற தேர்தலின் போது பெட்டியில் போடப்பட்ட பொதுமக்களின் மனு என்ன ஆனது? சாவி தொலைந்து விட்டதா? பெட்டி காணாமல் போய் விட்டதா?
மக்களின் ஆசையை தூண்டி மக்களை ஏமாற்றியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். மக்களை தந்திரமாக ஏமாற்றுவதில் விஞ்ஞான மூளையை பயன்படுத்துபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்றத்தை முடக்கி காவேரி நதி நீர் ஆணையத்தை அமைத்தது அதிமுக அரசின் சாதனை. அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்பதற்காக 7.5% உள்ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக தான்.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்காத இடமே இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தேர்தல் பத்திரத்தை பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி உள்ளது. சூதாட்டத்தில் இருந்து வந்த பணத்தில் கட்சி நடத்துகிறது திமுக. லாட்டரி நிறுவனத்திடம் இருந்து ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் வாங்கி உள்ளது திமுக. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு. போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவிலேயே மக்களை சந்திக்காத ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம். நாங்களா ஆளுங்கட்சியாக இருக்குறோம்? எதிர்க்கட்சியாக இருக்கும் எங்களால் எப்படி பிரதமர் மோடியை எதிர்க்க முடியும்?” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!
பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!