அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்ற காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்து சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி வருகிறது. நிலையான தேர்தல் அதிகாரிகளைக் கொண்ட குழு மற்றும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுப்பதை தடை செய்யும் நோக்கில் அதிகாரிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகளால் அரசியல்வாதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதற்கு பதிலாக வியாபாரிகள் இதனால் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்பவர்களிடம் அவர்கள் எந்த காரணங்கள் கூறினாலும் ஏற்காமல் வலுக்கட்டாயமாக தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு இடங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களில் செல்லும் அனைவரையும் நிறுத்தி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அரியலூர் அருகே அஸ்தினாபுரத்தில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் அவ்வழியாக அரியலூரிலிருந்து, ஜெயங்கொண்டம் நோக்கி போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்று கொண்டிருந்தார். அமைச்சரின் வாகனத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்துவதாக கூறினர்.அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சோதனைக்கு பின் ஜெயங்கொண்டம் புறப்பட்டுச் சென்றார். அமைச்சரின் காரில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
இதையும் வாசிக்கலாமே...
வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!