தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளது, பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி தனி தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கடந்த 25ம் தேதி எல்.முருகன் நீலகிரிக்கு வருகை தந்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மாலை 5 மணி அளவில் உதகையை அடுத்த கடநாடு கிரியுடையார் கோயிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அங்கு கடநாடு சமுதாயக்கூடம் முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 100க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடத்துவதற்கு குறித்து எந்தவித அனுமதியும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அவருடன் இருந்த பா.ஜ.க., மாவட்ட தலைவர் மோகன்ராஜ், நிர்வாகிகள் ஜெகதீஸ், ராஜேஷ், யுவராஜ் ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் கூட்டம் நடத்துவதாக இருந்தால் தேர்தல் நேரத்தில், தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும். அனுமதி வாங்காததால் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் அன்று பாஜகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தியிருந்தனர். தற்போது மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, நீலகிரி மாவட்ட பாஜகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!