சிறையில் அடைக்கப்பட்டாலும் அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வராகத் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கூறி வரும் நிலையில், ‘டெல்லி அரசு சிறையில் இருந்து இயக்கப்படாது’ என துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கேஜ்ரிவால் முதல்வராக நீடிப்பார் என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவார் என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி கூறினார்.
அதன் பின்னர் அமலாக்கத்துறை காவலில் இருந்தபடியே கேஜ்ரிவால் இரண்டு உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் தனது முதல் உத்தரவில், மக்களின் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைகளை தீர்க்க நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். இரண்டாவது உத்தரவில், மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் நோயறிதல் சோதனைகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜுக்கு உத்தரவிட்டார்
கேஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சியை நடத்துவது குறித்து ஆம் ஆத்மி கட்சியை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுகுறித்து பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், "சிறையிலிருந்து கும்பல்கள் இயக்கப்படுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம், அரசாங்கம் நடத்தப்படுவதை பார்த்ததில்லை" என்று கூறினார்
இந்த நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய டெல்லி துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா, “சிறையிலிருந்து ஆட்சி நடத்தப்படாது என்று டெல்லி மக்களுக்கு என்னால் உறுதியளிக்க முடியும். வரும் மாதங்களில், டெல்லியை உலகத் தரம் வாய்ந்த தலைநகராக மாற்றும் முயற்சிகளை தீவிரப்படுத்துவோம்” என்று அவர் கூறினார். அவரின் இந்த கருத்துகள் இப்போது டெல்லி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
ஒருவேளை அரசியலமைப்பின் 239 ஏஏ மற்றும் ஏபியின் கீழ் டெல்லியில் ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர துணைநிலை ஆளுநர் முயற்சி செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இது போன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக டெல்லி அமைச்சர் அதிஷி முதல்வராக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், டெல்லி முதல்வர் யூகத்தில் கேஜ்ரிவால் மனைவி சுனிதாவின் பெயரும் உலா வருகிறது.