தேர்தலில் அதிகம் வாக்குகள் வாங்கித் தரும் கட்சிக்காரர்களுக்கு 10 சவரன் தங்கம் வழங்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.
18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து கட்சிகளின் சார்பிலும் தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. இன்று மாலையுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சிகள் அடுத்த கட்டமாக மக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் இறங்கியுள்ளன.
திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாநிலம் முழுவதும் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஊர் ஊராகச் சென்று பிர்சாரம் செய்து வருகிறார்.
மேலும், கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட செயலாளர்களும் அந்தப் பகுதி முன்னாள் அமைச்சர்களும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்காக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அதிகமாக வாக்குகள் வாங்கித்தரும் கட்சிக்காரர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்
திருவண்ணாமலை மாவட்டம் வேலூரில் ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்த அவர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். "ஆரணி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் எந்தத் தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளருக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தருகிறார்களோ அந்த தொகுதியின் மாவட்ட ஒன்றிய கிளை செயலாளர்களுக்கு பத்து சவரன் தங்கம் வழங்கப்படும் என்று பேசினார்.
இது ஆரணி தொகுதி அதிமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனால் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!