திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் என யாரும் இலவு காத்த கிளி போல் காத்திருக்க வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இருப்பினும் பிரதான கட்சிகளான காங்கிரஸ் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, கடந்த மக்களவைத் தேர்தலின் போது 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு தனித் தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட உயர்நிலை செயல்திட்டக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை அவசரகதியில் நடத்த வேண்டாம் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், ”விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து பயணிப்போம். அதில் எந்தவித ஊசலாட்டமும் இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் என நினைத்து அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. திமுக கூட்டணியில் இடைவெளி வரும் என யாரும் இலவு காத்த கிளி போல் காத்திருக்க வேண்டாம். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். இதில் எந்த மாற்றமும் கிடையாது” என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!