காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இன்னாள் ராஜமாதாவுமாகிய சோனியா காந்தி தேர்தல் அரசியலுக்கு விடைகொடுத்து, ராஜ்யசபா எம்பி ஆகிவிட்டார். இத்தனை காலமாக அவர் போட்டியிட்டு வென்றுவந்த உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பிரியங்காவின் வருகையாவது காங்கிரசுக்கு புத்துயிரூட்டுமா என்று காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசமே காங்கிரசின் கோட்டைதான். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் ஏகோபித்த நம்பிக்கையை பெற்ற மாநிலம் அது. 1990-க்குப் பின்னர் அங்கே களநிலவரமே மாறியது. ஒரு காலத்தில் அத்தனை தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றிய நிலை மாறி, கடந்த தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தவிர மற்ற 79 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றுப் போனது. இதில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியும் அடக்கம்.
மக்களவை என்று இல்லை, சட்டப்பேரவையிலும் மொத்தமுள்ள 403 இடங்களில் 2 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இன்று காங்கிரஸ் வசமுள்ளனர். இப்படி இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி, மொத்தமாக காங்கிரசின் கையைவிட்டு போய்விட்டது. இந்த சூழலில்தான் உ.பி-யில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இம்முறை பிரியங்கா காந்தி களம் காணவுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆக்டிவ் அரசியலை தவிர்த்துவரும் சோனியா காந்தி, இப்போது தேர்தல் அரசியலில் இருந்தும் விடைபெற்றுள்ளார். இந்த கடினமான முடிவை அவர் எடுக்க துணிந்தபோது அவர் கண்முன் நின்றது பிரியங்கா காந்திதான். ஏனென்றால் இந்தியாவை வெல்ல வேண்டுமானால், அதற்கு முக்கியமாக உ.பி-யை வெல்ல வேண்டும். எனவே, உ.பி-யில் காங்கிரஸை மீண்டும் வலுப்படுத்த பிரியங்கா காந்தி முக்கிய பங்காற்றுவார் என்று உறுதியாக நம்புகிறார் சோனியா. ஏனென்றால் ரேபரேலி, அமேதி தொகுதிகளின் வெற்றி என்பது காங்கிரசுக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல; அது அக்கட்சிக்கான கவுரவம்.
பிரியங்கா காந்தியின் வசம் உ.பி-க்கான பொறுப்பு வழங்கப்பட்ட உடனேயே அவர் ஒரு மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இழுபறியில் இருந்த சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்துள்ளார். 11 தொகுதிகள் தான் தருவோம் என விடாப்பிடியாக இருந்த அகிலேஷையும், 25 தொகுதிகள் வேண்டும் என அடம்பிடித்த ராகுலையும் சரிகட்டி காங்கிரசுக்கு 17 தொகுதிகளை உறுதிசெய்து கொடுத்துள்ளார் பிரியங்கா காந்தி. உ.பி-யில் இந்த கூட்டணி அமைந்தது காங்கிரசுக்கு மட்டுமல்ல இந்தியா கூட்டணிக்கே நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதே பாணியில் டெல்லி, பஞ்சாப், மே.வங்கம் உள்ளிட்ட இன்னும் சில மாநிலங்களிலும் கூட்டணி உறுதியாக வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரியங்கா.
கடந்த காலங்களை விடவும் சமாஜ்வாதி உ.பி-யில் இப்போது பலமாக உள்ளது. ராமர் கோயில், மோடி அலை, யோகி மேஜிக் எல்லாம் இருந்தாலும் அகிலேஷின் தாக்கம் அங்கே அதிகம்தான். எனவே, இப்போது பிரியங்காவும், அகிலேஷும் கைகோத்துள்ளது பாஜகவுக்கு கலக்கத்தை உருவாக்கியுள்ளது. பிரியங்காவின் தேர்தல் அரசியல் வருகை உ.பியின் மற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் உற்சாகமளிக்கும்.
இந்திரா காந்தியின் சாயலை பிரதிபலிக்கும் பிரியங்காவின் ‘ஃபேஸ் வேல்யூ’ காங்கிரசுக்கு பலம் சேர்க்கும் என்று காங்கிரஸார் நம்புகின்றனர். ஒருவேளை இந்தத் தேர்தலில் பிரியங்காவின் அரசியல் கணிசமான வெற்றியை பெற்றால், அவரே வரும் காலங்களில் காங்கிரசின் முகமாக பல மாநிலங்களில் முன்னிறுத்தப்படலாம்.
2019-ல் நேரடியாக அரசியலுக்கு வந்த பிரியங்கா காந்தி அந்த ஆண்டின் மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, அமேதியில் பணியாற்றினார். இதில் அமேதி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து காங்கிரஸை வழிநடத்தினார். கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருந்த காங்கிரஸுக்கு கொஞ்சம் உயிர்க்காற்று அப்போது கிடைத்தது.
இருந்தாலும் 2022 சட்டமன்றத்தேர்தலில் உ.பி-யில் மொத்தமுள்ள 403 இடங்களில் 2-ல் தான் காங்கிரஸ் வென்றது. ஆனால், நம்பிக்கைக்குரிய விஷயம், 2019-ல் வெறும் 6.36 சதவீதமாக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம் 2022-ல் 12.31 சதவீதமாக உயர்ந்தது. அதேபோல பிரியங்கா பொறுப்பாளராக இருந்த இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
பிரியங்கா களத்தில் துணிச்சல் பேர்வழி. இந்திரா காந்தி பாணியிலான தடாலடியும், கூர்மையான விமர்சனங்களும், கட்சியினரை அரவணைக்கும் பாங்கும் அவரின் பிளஸ் பாயின்டாகப் பார்க்கப்படுகிறது. அதனால் தான் அவர் முக்கிய பொறுப்புக்கு வரவேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர்.
ஒருபக்கம் இந்தியா கூட்டணியில் இருக்கும் பல கட்சிகளும் ஓட்டம் பிடிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்கூட விலகி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. கார்கேயின் தலைமையும் கைகொடுக்கவில்லை. இப்படி எல்லாப்பக்கமும் இருள் சூழ்ந்துள்ள காங்கிரஸின் நிகழ்காலத்தில் இப்போதைய ஒரே நம்பிக்கை வெளிச்சம் பிரியங்கா காந்திதான். ஒருவேளை, உ.பி. அரசியலில் அவர் இம்முறை ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தினால், அது ஒட்டுமொத்த காங்கிரசுக்குமான எழுச்சியாக மாறும்.
பிரியங்காவுக்கு தென் மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளதை கர்நாடகா, தெலங்கானா தேர்தல் முடிவுகள் எதிரொலித்தது. இந்த இரு மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் பிரியங்காவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. எனவே, பிரியங்காவை தென்மாநிலங்களில் முன்னிலைப்படுத்தும் வேலைகளையும் காங்கிரஸ் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அவர் தென் மாநிலங்களில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியிலும் கூடுதலாக போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் அவர் தமிழ்நாட்டில் கூட போட்டியிடலாம் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடலாம் என ஓராண்டாகவே பேசப்படுகிறது. அப்படி மோடி இங்கே களமிறங்கினால், அவருக்குப் போட்டியாக ஸ்ரீபெரும்புதூரில் பிரியங்காவை காங்கிரஸ் களமிறக்கலாம் என்கிறார்கள்.
2014-க்குப் பின்னர் தொடர் சரிவை சந்தித்து வரும் காங்கிரஸை மீட்க தேவதூதர்கள் யாரும் வரமாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர் அக்கட்சியின் தொண்டர்கள். அப்படி ஒரு மீட்பராக பிரியங்கா காந்தி இருப்பாரா என்பதை வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் சொல்லும்.