தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் காற்று மாசு அளவு வழக்கத்தைவிட மோசமாக உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று காற்று மாசு 170ஆக இருந்த நிலையில், விடிய வடிய வாணவேடிக்கை நடந்ததால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து தரக்குறியீடு 200ஐ கடந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301 ஆகவும், அரும்பாக்கத்தில் 260 ஆகவும், ஆலந்தூரில் 256ஆகவும், ராயபுரத்தில் 227 ஆகவும் பதிவாகியுள்ளது.
பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர். காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு அதிகரிப்பு எதிரொலியால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.