நடிகை த்ரிஷா விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதை கண்டித்து அவர் அளித்த பேட்டியில், முன்னாள் அமைச்சர்கள் குறித்தும், கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்ட விதம் குறித்தும் பேசியிருந்தார். பேட்டியின் போது நடிகை த்ரிஷா குறித்து அவர் சர்ச்சையாக பேசிய வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலானது. இதைக் கண்டித்தும், த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் இயக்குநர் சேரன், நடிகர் விஷால், மன்சூர் அலிகான் ஆகியோர் குரல் எழுப்பினர். நடிகர் சங்கம் உட்பட திரைத்துறை சார்ந்த சங்கங்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பின.
இந்த பிரச்சினை குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. அவர் மீது சட்ட நடவடிக்கை அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்படும்’ என்று தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இன்று அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் நஷ்ட ஈடு கேட்டும் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, த்ரிஷாவுக்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலையும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் சகோதரி த்ரிஷாவை சிலர் தவறாக பேசி வருகின்றனர், இது கண்டிக்கதக்கது. அவரை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிகளில் நஷ்ட ஈடு?! சர்ச்சையைக் கிளப்பிய நடிகை த்ரிஷாவின் வக்கீல் நோட்டீஸ்!