தீபாவளி ஸ்பெஷல்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கடைகளை திறந்து வைக்கலாம்!


தீபாவளி மக்கள் கூட்டம்

கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு மாநகரில் கடைகளை இரவு கூடுதல் நேரம் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி வாரத்திற்கு ஒரு முறை காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி போன்ற முக்கியமான நேரங்களில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் கடைத்தெருக்களில் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேசமயம் ஒரு சில நாட்களில் மட்டும் சில மணி நேரம் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில் காவலர்களுக்கு ஓய்வு வழங்கப்படும்.

தீபாவளியை முன்னிட்டு கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்களும் சட்டம் ஒழுங்கு காவலர்களும் அதிக அளவில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் போன்ற குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தீபாவளி விற்பனைக்காக இரவில் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கடையை திறந்து வைக்க கடை உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல்துறை அதற்கான பாதுகாப்பை வழங்கும் என்று கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளோம். மேலும் மாநகரில் குற்றங்களை தடுப்பதற்கு ஒப்பணக்கார வீதியை சுற்றிலும் அதிநவீன முகத்தை துல்லியமாக கண்டறியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மெட்டா டேட்டா என்ற புதிய தொழில் நுட்பத்துடனான 110 கேமராக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பொருத்தப்பட்டுள்ளது . இதன் அடுத்த கட்டமாக மேலும் கூடுதலாக 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த கேமராக்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த நவீன கேமராக்கள் குற்றங்களை தடுப்பதற்கும் தீபாவளி சமயத்தில் பாதுகாப்பாக பொதுமக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருக்கும். தீபாவளி கூட்டத்தை கண்காணிப்பதற்காக ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் வீதி ஆகிய இடங்களில் உயர் கோபுர கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை நகரம்

தீபாவளியை பொறுத்தவரை கோவை மாநகரில் உள்ள 3 ஆயிரம் காவலர்களும் பணியில் இருப்பார்கள். பிக்பாக்கெட் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக கடைத்தெருக்கள் இருக்கக்கூடிய காவல் நிலையங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சிறப்பு ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

x