'ஒன்றிய அரசு பட்ஜெட், தமிழ்நாட்டுக்கு முட்டை, எங்கள் வரிப்பணம் எங்கே?' என்ற வாசகங்களுடன் சென்னையில் பல்வேறு திடீரென பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என திமுக எம்.பி-க்கள் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசினர். இதேபோல், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடாகா மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அந்தந்த மாநில முதலமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், சமீபத்தில் கர்நாடாகா சார்பில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் எம்.பி, எம்எல்ஏக்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தினர். இதேபோல், கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சார்பில் திமுக எம்.பி-க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன், ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி-க்கள் கருப்பு சட்டை அணிந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ளது என்றும், ஆனால், மத்திய அரசிடமிருந்து வெறும் ரூ.1.58 லட்சம் கோடி மட்டுமே வரிப்பகிர்வாக திரும்பி வந்துள்ளது எனவும், ஆனால் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் 5 ஆண்டுகளில் ரூ.3.41 லட்சம் வரி செலுத்தியுள்ளது. ஆனால் அந்த மாநிலத்துக்கு ரூ.7 லட்சம் வரிப்பகிர்வு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது எனவும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, பாஜக அல்லாத மாநிலங்களுக்கு வரிப் பகிர்வு மற்றும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாமல் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் 'ஒன்றிய அரசு பட்ஜெட், தமிழ்நாட்டுக்கு முட்டை, எங்கள் வரிப்பணம் எங்கே?' என்ற வாசகங்களுடன் சென்னையில் பல்வேறு திடீரென பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் நடிகர் வடிவேலு வெறும் பாக்கெட்டை வெளியில் இழுத்து காண்பிப்பது போன்ற கார்ட்டூன் படமும் இடம் பெற்றுள்ளது.
இந்த பேனரைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள பாஜகவினர், திமுகதான் மறைமுகமாக இந்த வேலையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!