இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தேர்தலை 4 மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் நிர்வாக குளறுபடி, முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, நிர்வாக குழுவின் தலைவர் பதவி விலகினார். இதையடுத்து, சங்கத்தை நிர்வகிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தலைமையில் தற்காலிக குழுவை நியமித்து கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். குழுவின் 6 மாத பதவிக்காலம் முடிந்த நிலையில், மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.
புதிய நிர்வாக குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தாததால், சங்கத்தின் செயல்பாடுகள் முடங்குவதை தவிர்க்கும் வகையில் தற்காலிக குழு தொடர்ந்து செயல்பட உத்தரவிடக் கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் செஞ்சிலுவை சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மாநில நிர்வாக குழுவின் பதவிகாலத்தை ஓராண்டிற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பதால், நிர்வாகிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென ஆளுநரால் நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தலை நடத்தி அதில் புதிய நிர்வாகிகளை தேர்தெடுக்கும் வரை சங்கத்தின் கணக்குகளை நிர்வகிப்பது, அன்றாட பணிகளை மேற்கொள்வது போன்றவற்றை செய்யலாம் என்றும், ஆனால் கொள்கை முடிவு ஏதும் எடுக்கக் கூடாது என்றும் ஆளுநர் நியமித்த தற்காலிக குழுவிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.