தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்... மத்திய இணை அமைச்சரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்


மத்திய இணை அமைச்சருடன் டி.ஆர்.பாலு குழுவினர் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்படைகளால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய இணை அமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்து, முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்தை திமுக எம்பி டி.ஆர்.பாலு வழங்கினார்.

கடந்த 28-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதே போல் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கடந்த 23-ம் தேதி தூத்துகுடியை சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்யப்பட்டு அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

மாலத்தீவு கடற்படை கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள்

இந்நிலையில், தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரனை சந்தித்துப் பேசினர். அப்போது மாலத்தீவு மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய இணையமைச்சரிடம் டி.ஆர். பாலு ஒப்படைத்தார்.

படகு

இந்த சந்திப்பின் போது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x