இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் நல்லதல்ல என தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, இந்தியா முழுவதும் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திமுக, தேசிய மாநாட்டு கட்சி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டுள்ளது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. அதேபோல உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு விஷயத்தில் மோதல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கூறுகையில்," இந்தியா கூட்டணியின் நிலை தற்போது வலுவாக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது, சில உள் சண்டைகள் இருக்கக்கூடாது.
சமாஜ்வாதி - காங்கிரஸ் இடையே மோதல் உருவாகியுள்ளது. இரு கட்சிகளும் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து இடங்களிலும் போட்டியிட போவதாக மாறி மாறி அறிவிக்கின்றன. இது கூட்டணிக்கு நல்லதல்ல. 5 மாநில தேர்தலுக்கு பிறகு மீண்டும் இது குறித்து ஆலோசனை செய்வோம்" என்றார்.