கர்நாடக முதல்வருக்கு ரூ.10,000 அபராதம்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


முதல்வர் சித்தராமையா

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை

கடந்த 2022-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியின் போது, காண்ட்ராக்டராக இருந்த சந்தோஷ் பாட்டீல் என்பவர் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு அப்போதைய அமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, அப்போது, அவரை கைது செய்ய வலியுறுத்தியும், முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் சார்பில் தற்போதைய முதல்வரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா தலைமையில் முதல்வர் இல்லம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

கர்நாடக உயர் நீதிமன்றம்

இந்த போராட்டத்தில் தற்போதைய உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்‌ஷித், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது.

முதல்வர் சித்தராமையா, மாநில கேபினட் அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் தனித்தனியாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி அதற்கான தேதியையும் அறிவித்தார்.

முதல்வர் சித்தராமையா மார்ச் 6-ம் தேதியும், சுர்ஜேவாலா மார்ச் 7-ம் தேதியும், எம்பி பாட்டீல் மார்ச் 11-ம் தேதியும், ராமலிங்க ரெட்டி மார்ச் 15-ம் தேதியும் ஆஜராக உத்தரவிட்டார். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகும் அன்று எந்த கலாட்டாவும் நடக்கக்கூடாது என்றும், ஒவ்வொருவரும் சென்று அவர்களுக்கான உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

x