பெண் பத்திரிகையாளரின் தோளில் கைவைத்ததால் பரபரப்பு... மன்னிப்புக் கேட்டார் பாஜக நடிகர்!


பெண் பத்திரிகையாளரின் தோளில் கைவைத்த பாஜக நடிகர் சுரேஷ் கோபி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், ‘தீனா’, ‘ஐ’, ‘தமிழரசன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பாஜகவை சேர்ந்த இவர், கேரள மாநிலம் கோழிகோடில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர், “கேரளாவில், இத்தனை வருடங்களில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கூட பாஜகவால் கைப்பற்ற முடியவில்லையே?” என்று கேட்டார்.

அப்போது அவர் தோளில் கைவைத்தபடி சுரேஷ் கோபி பேசினார். அந்தப் பத்திரிகையாளர் அவர் கையைத் தட்டிவிட்டார். “மனிதர்களால் முடியாதது எதுவுமில்லை” என்ற அவர், சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவர் தோளில் கை வைத்தார். அவர் குரலில் மாற்றம் தெரிந்தது.“கேரளாவும் இந்தியாதான். அதைப் புரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறிவிட்டு வெளியேறினார்.

பெண் பத்திரிகையாளர் தோளில் சுரேஷ் கோபி கைவைத்தது பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவின. கேரள பத்திரிகையாளர் சங்கம் இதற்குக் கண்டனம் தெரிவித்ததுடன் சுரேஷ் கோபி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. சமூக வலைதளங்களில் இந்த பிரச்சினை வைரலானதை அடுத்து சுரேஷ் கோபி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அவர், “இதுவரை எப்போதும் பொதுஇடங்களில் தவறாக நடந்துகொண்டதில்லை. இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பத்திரிகையாளரின் உணர்வுகளை மதிக்கிறேன். எனது நடத்தையால் அவர் மனம் புண்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

x