மத்திய பிரதேசத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதம் ரூ.500-ம், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 மற்றும் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500-ம் உதவித் தொகையும் வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 17-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, மாண்ட்லா என்ற இடத்தில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி மட்டுமின்றி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதம் ரூ.500-ம், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 மற்றும் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500-ம் உதவித் தொகையும் வழங்கப்படும். ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர், பெண்களுக்கு ரூ.1,500 மாத உதவித் தொகை, கடன் தள்ளுபடி, 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவையும் வழங்கப்படும்’’ என்றார்.