பரபரப்பு… செங்கல்பட்டில் பிரபல ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!


செங்கல்பட்டு அருகே பிரபல ரவுடி மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்த தணிகா என்கிற தணிகாசலம் மீது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் A+ ரவுடி பிரிவில் உள்ளார்.

வழிப்பறி தொடர்பாக தணிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் கடந்த சில தினங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து செங்கல்பட்டு தனிப்படை போலீஸார், சென்னையில் பதுங்கி இருந்த தணிகாவை நேற்றிரவு கைது செய்து சித்தாமூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது மாமண்டூர் பகுதியில் வந்தபோது தணிகா தப்பிப்பதற்காக காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

எனவே அவரை பிடிக்க போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் வலது கை, வலது கால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தொடர்ந்து தணிகாவை மீட்ட போலீஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x