மணல் குவாரி உரிமம் தொடர்​பான வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்


மதுரை: மணல் குவாரி உரிமம் தொடர்​பாக 15 ஆண்​டு​களுக்கு முன்பு நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை செயல்​படுத்​தாத தமிழக அரசுக்கு ரூ.25 லட்​சம் அபராதம் விதித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. திருச்சி மாவட்ட ஆட்​சி​யருக்கு எதி​ராக சாந்​தி, பாலாஜி, விஷ்ணுவர்​தன், உமா மகேஸ்​வரி, பவானி ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த நீதி​மன்ற அவம​திப்பு மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திருச்சி மாவட்​டம் தொட்​டி​யம் தாலுகா னி​வாசநல்​லூர் காவிரி ஆற்​றில் 2001 முதல் 2004 வரை மணல் குவாரி நடத்த உரிமம் பெற்​றிருந்​தோம்.

அடுத்த சில மாதங்​களில் மணல் குவாரி​களை அரசே ஏற்று நடத்​தி​யது. மணல் குவாரி​களை அரசு ஏற்​றதற்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தோம். அந்த வழக்​கில் அரசின் உத்​தரவை நீதி​மன்​றம் உறுதி செய்​த​ போ​தி​லும், நாங்​கள் சில மாதங்​கள் குவாரி நடத்த அனு​மதி வழங்​கியது. இதற்கு எதி​ராக திருச்சி மாவட்ட நிர்​வாகம், உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது.

இதை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற உத்​தரவை உறுதி செய்​தது. அதன் பின்​னரும் உயர் நீதி​மன்ற உத்​தரவை மாவட்ட நிர்​வாகம் அமல்​படுத்​த​வில்​லை. எனவே, உயர் நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றாத திருச்சி மாவட்ட ஆட்​சி​யர் மீது அவம​திப்பு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை விசா​ரித்து நீதிபதி குமரேஷ்​பாபு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: மணல் குவாரி நடத்​தும் பொறுப்பை அரசு ஏற்ற பின்பு மனு​தா​ரர்​களுக்கு 6 மாதம் குவாரி நடத்த உச்ச நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது. இருப்​பினும் மாவட்ட நிர்​வாகம் பல்​வேறு காரணங்​களைக் கூறி குவாரி நடத்த மனு​தா​ரர்​களுக்கு அனு​மதி வழங்​க​வில்​லை. மனு​தா​ரர்​கள் பல மனுக்​கள் அனுப்​பி​யும், நீதி​மன்​றத்​தில் உத்​தர​வு​கள் பெற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

உயர் நீதி​மன்ற உத்​தரவு 15 ஆண்​டு​களாக நிறைவேற்​றப்​ப​டா​மல் உள்​ளது. இந்​தக் கால​கட்​டத்​தில் பல மாவட்ட ஆட்​சி​யர்​கள் பொறுப்​பில் இருந்து மாறி​யிருப்​பார்​கள். இதனால், தற்​போதைய ஆட்​சி​யரை மட்​டும் குறை சொல்​வ​தால் எந்​தப் பயனும் இல்​லை. எனவே, நீதி​மன்ற உத்​தரவை வேண்​டும் என்றே மீறியதற்​காக, மனு​தா​ரர்​கள் 5 பேருக்​கும் தமிழக தொழில் துறை முதன்​மைச் செயலர் ரூ.20 லட்​சம் வழங்க வேண்​டும். இதுத​விர, உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யின் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்​சம் வழங்க வேண்​டும். இந்​தத் தொகையை 8 வாரங்​களில் செலுத்​த வேண்​டும்​. இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ கூறி​யுள்​ளார்​.

x