சேலம்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 6,233 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக உயர்ந்துள்ளது. கோடைகாலத்தின் உச்ச காலமான அக்னி நட்சத்திர வெயில்காலம் நீடிக்கும் நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது.
கடந்த 14-ம் தேதி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 390 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், மேட்டூர் சுற்று வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக 17-ம் தேதி 55.4 மி.மீ. மழை பெய்த நிலையில் நேற்று முன்தினம் 100.6 மி.மீ. மழை கொட்டியது.
இதனால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 4,764 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,233 கன அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.52 அடியில் இருந்து நேற்று 108.82 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 76.32 டிஎம்சியிலிருந்து நேற்று 76.74 டி.எம்.சி-யாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைக் காட்டிலும், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் அடுத்தடுத்த நாட்களாக மழை தொடருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.