அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத் துறை: அமைச்சர் முத்துசாமி கண்டனம்


டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாக ஒரு கற்பனை செய்தியை வெளியிட்டு, அதை நியாயப்படுத்த, டாஸ்மாக் அலுவலர்களை அமலாக்க துறை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததுபோல சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்க துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது. கடந்த அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்குகளை அடிப்படையாக கொண்டு சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனைகளின்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடு நடந்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்ததாக ஒரு கற்பனை செய்தியை அமலாக்க துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்த, டாஸ்மாக் அலுவலர்களை அமலாக்க துறை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலரது வீடுகளில் அமலாக்க துறை கடந்த 16-ம் தேதி சோதனை மேற்கொண்டது. அப்போதும் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்க துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.

அமலாக்க துறை தொடர்பான பல வழக்குகளில், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளை தொடர்ந்து மீறி, அமலாக்க துறை இவ்வாறு மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தேவையான அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

x