சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளின் சேர்க்கைக்கான அறிவிப்பு ஏமாற்றும் செயலாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடையும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை 1.15 கோடி. இவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் நிதிவழங்க ரூ.13,800 கோடி தேவை. ஆனால் 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்காக ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தேவையை விட ரூ.7 கோடி மட்டுமே அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை கொண்டு 5,833 பேருக்கு மட்டும் தான் கூடுதலாக உரிமைத் தொகையை வழங்க முடியும். இந்நிலையில் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 4-ம் தேதி முதல் பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்காக தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் மையங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அதன்படி ஒவ்வொரு மையத்திலும் 100 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக வைத்துக்கொண்டாலும் 9 லட்சம் பேருக்கு கூடுதல் உரிமை தொகை தர வேண்டும். ஆனால் அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு 9 ஆயிரம் பேருக்கு கூட வழங்க முடியாது. இது மக்களை ஏமாற்றும் செயல். கூடுதல் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்க நிதி எங்கிருந்து கிடைக்கும்? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசு விடையளிக்க வேண்டும்.