அரியலூர்: உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை


அரியலூர் மாவட்டம் காவனூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்பரப்பியான் தெரு கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் (41). இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும் அட்சயா, சுபஸ்ரீ என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் மே 4-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.

சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ், கடந்த 12-ம் தேதி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பாக்யராஜ் மூளைச் சாவு அடைந்தார்.

அரசு மருத்துவர்கள் பாக்யராஜின் குடும்பத்தினருடன் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், பாக்யராஜின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். சிறப்பு மருத்துவர்கள் மூலம் பாக்யராஜின் உடலில் நல்ல செயல்பாட்டில் இருந்த சிறுநீரகம், தோல் உள்ளிட்ட பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

இதனையடுத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாக்யராஜின் உடலுக்கு மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து பாக்யராஜ் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

x