கொடைக்கானல்: சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கொடைக்கானலில் ‘பாரா செயிலிங்’ எனும் பாராசூட் சாகச நிகழ்ச்சி நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் விரைவில் கோடை விழா மற்றும் 62-வது மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழக சுற்றுலாத் துறை பாராசூட் சாகச (பாரா செயிலிங்) நிகழ்ச்சியை நாளை முதல் 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கொடைக்கானலில் உள்ள மூஞ்சிக்கல் மைதானத்தில் நடத்த உள்ளது.
காற்றின் வேகம், சீதோஷ்ண நிலையை பொறுத்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பாராசூட் சாகசப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 15 முதல் 60 வயது வரையுள்ள இருபாலரும் பங்கேற்கலாம்.
வானில் பறந்தவாறு கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 73733 90531 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். சுற்றுலாப் பயணிகளை எவ்ளவு துாரம் பறக்க வைக்கலாம் என பாராசூட்டில் பறந்து ஆய்வு செய்து வருவதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.