மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மதச்சார்பின்மையைக் காக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 31-ம் தேதி திருச்சியில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் பேரணியில் மதவாதத்துக்கு எதிரான அனைவரும் பங்கேற்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்று கூறவில்லை. பிஹார் தேர்தலுக்கான கண் துடைப்பு அறிவிப்பாகவே இதைப் பார்க்கிறோம்.
புதுக்கோட்டை வடகாடு கிராமக் கோயில் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தலித் மக்களைத் தாக்கியதுடன், அவர்கள் மீதே காவல் துறை நடவடிக்கை எடுத்தது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்ததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். மரத்தை வெட்டுங்கள், கல்லெடுத்து அடியுங்கள் என்று கூறிய அன்புமணி ராமதாஸ், தற்போது படியுங்கள் என்று சொல்லும் அளவுக்கு பண்பாளராக மாறியிருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.