குற்றவாளிகளுக்கு இறக்கும் வரை சிறை தண்டனை: பொள்ளாச்சி வழக்கில் சட்ட வல்லுநர்கள் விளக்கம்


கோவை: பொள்​ளாச்சி பாலியல் வழக்கு குற்​ற​வாளி​கள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்​டனை விதித்து கோவை மகளிர் நீதி​மன்​றம் தீர்ப்பை வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து சட்ட வல்​லுநர்​கள் கூறிய​தாவது: சாகும் வரை ஆயுள் தண்​டனை என்​பது, வழக்​க​மான ஆயுள் தண்​டனையி​லிருந்து வேறு​பட்​டது. வழக்​க​மான ஆயுள் தண்​டனை​யில் 14 ஆண்​டு​களுக்​குப் பிறகு நன்​னடத்தை அடிப்​படை​யில் விடு​தலை சாத்​தி​ய​மாகும். ஆனால், நிர்​பயா வழக்கு உத்​தர​வைத் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்​கொடுமைக்கு 376-டி புதிய சட்​டத் திருத்​தங்​கள் கொண்டு வரப்​பட்​டன. சாட்​சிகள் பாது​காப்பு திட்​டத்​தில், கூடு​தல் பாது​காப்பு அம்​சங்​கள் சேர்க்​கப்​பட்​டன.

பொள்​ளாச்சி பாலியல் வழக்​கைப் பொறுத்​தவரை, பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் மற்​றும் சாட்சி விவரங்​களை சிபிஐ ரகசி​யம் காத்​தது. சாகும் வரை ஆயுள் தண்​டனை என்​பது, குற்​ற​வாளி​யாக அறிவிக்​கப்​பட்ட 9 பேரும் தங்​களின் இயற்கை மரணம் வரை சிறை​யில் இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இந்த வழக்​கில் கூட்​டுச்​ச​தி, விரும்​பத்​த​காத பாலியல் சீண்​டல், ஆடைகளைக் கழற்றி நிர்​வாணப்​படுத்​துதல், ஆள் கடத்​தல், கூட்டு பாலியல் வன்​கொடுமை, தொடர் கூட்டு பாலியல் வன்​கொடுமை, மானபங்​கம் செய்​தல், ஆபாச வீடியோ எடுத்​தல், ஆபாச வீடியோவைப் பகிர்​தல், கொலை மிரட்​டல் விடுத்​தல், பெண்​களுக்கு எதி​ரான வன்​கொடுமை தடுப்பு சட்​டப் பிரிவு உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு​கள் பதிவு செய்​யப்பட்டன.

48 சாட்​சிகள்​... இந்த வழக்​கில் 48 சாட்​சிகளிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அரசு, எதிர்​தரப்பு என 240 ஆவணங்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. லேப்​டாப், செல்​போன், மெமரி​கார்​டு, கார் உள்​ளிட்ட 30 வகை​யான ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. குற்​றப்​பத்​திரிகை மற்​றும் கூடு​தல் குற்​றப்​பத்​திரி​கைகள் 390 பக்​கங்​கள், விசா​ரணை ஆவணங்​கள் உட்பட மொத்​தம் 1,500 பக்க ஆவணங்​கள் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டன.
அரசுத் தரப்​பில் 76 குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டன. பாலியல் வழக்கு விசா​ரணைக்​காக உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி மூடப்​பட்ட தனி அறை​யில் விசா​ரணை நடத்​தப்​பட்​டது குறிப்பிடத்​தக்​கது.

x