சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை புழலை அடுத்த புத்தகரம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சத்துக்கும் கூடுதலாக பணத்தை இழந்ததால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். முருகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
முருகனின் தற்கொலை கடந்த 5 மாதங்களில் நிகழ்ந்த 12-ம் தற்கொலை ஆகும். திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 29 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 89 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்துள்ளனர். இவ்வளவு பேர் இன்னுயிரை இழப்பதை தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருந்திருக்கக்கூடாது.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 16 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது தான் இவ்வளவு உயிரிழப்புகளுக்கு காரணமாகும்.
இதை உணர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.