தூய்மை பணியாளரை தொழில்முனைவோராக்கும் திட்டத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு


சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. மேலும், துாய்மைப் பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் வகையில் மத்திய அரசும் நமஸ்தே திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, இந்த திட்டங்களை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில்சபை என்ற தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவரும் பெரும் பங்கு வகித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பெரும் தொகை உண்மையான பயனாளிகளுக்கு சென்றடையவில்லை. இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதாலேயே தூய்மைப் பணியாளர்கள் உடையில் வந்த சமூகவிரோதிகள் எனது வீட்டில் கழிவுநீரைக் கொட்டி அசுத்தம் செய்து, வன்முறையில் ஈடுபட்டனர். எனவே, இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு, உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

x