தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசமாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டி உள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசமாக உள்ளது. நியாயமான, ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சென்னை போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடிய இடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் இல்லாத, குறுகலான இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தும் போது, அவர்கள் போராட்டத்துக்கு புறப்படும் இடத்திலேயே கைது செய்வது, வீட்டில் சிறையில் வைப்பது போன்ற மிக மோசமான அணுகு முறைகள் பின்பற்றப் படுகின்றன. எனவே, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் இப்பிரச்சினைகளில் கூடுதலாக கவனம் செலுத்தி ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர் வாரும் பணியை தண்ணீர் வருவதற்கு முன்பாகவே முழுமையாக முடிக்க வேண்டும். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பரிந்துரைகளை வெளியிடுவதற்கு நீதிமன்றமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து, அதைச் செயல்படுத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை வெறும் கணக்கெடுப்பாக செய்யாமல், சமூக, பொருளாதாரப் பின்புலத்துடன் செய்ய வேண்டும்.
சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பதை சொல்லவில்லை. மேலும், இக்கணக்கெடுப்பு எந்த அடிப்படையில் எடுக்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. கணக்கெடுப்பு நடத்துவதற்கு காலவரையறையை நிர்ணயிக்க வேண்டும் என்றார். அப்போது கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.